Tuesday, March 22, 2011

நினைத்து பார்த்தாயா?

வீட்டில் உள்ள உறவுகளின் நிலை உணராமல்
வினையாகும் விளையாட்டு பிள்ளைகளாய்
வெளிநாட்டினிலே வாழ்கின்ற நண்பர்களே
சொந்த நாட்டினிலே சொந்தங்கள் படும்
துன்பங்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்
...
முன் நூறு நாள் சுமந்து பெற்றெடுத்து
முகம் மலர முகம் கழுவி குளிப்பாட்டி
மூன்று வேளை உணவூட்டிய உன் தாய்
தாய் நாட்டில் உன்னை எண்ணி படும் பாட்டை
கொஞ்சம் நீ நினைத்து பார்த்தாயா ,,,,

மழலையாய் மகிழ்ந்து விளையாட உன்
மனம் விரும்பியதை வாங்கி தந்து
தினம் வருந்தி உழைத்த காசை உனக்காய்
செலவு செய்த உன் அருமை தந்தையை
ஒரு கணமேனும் நீ நினைத்து பார்த்தாயா ,,,,

தமிழ் பண்டிகை காலங்களில் உன் அப்பா
தனக்கென்று தானாக எதுவும் வாங்காமல்
உனக்காக விதம் விதமாய் உடை வாங்கி
உடுத்து அழகு பார்த்த உன் பெற்றவர்களை
கொஞ்சம் நீ நினைத்து பார்த்தாயா ,,,,,,,

வெளிநாடு மகன் போகவென உற்றவர்கள்
வெயிலிலே வெந்து உழைத்த காசோடு
பலரிடம் கடன்பட்டதையும் ஒன்றாக்கி தந்ததையும்
அம்மாவின் கொடியுடன் தங்க நகை அத்தனையும்
அடைவில் இருப்பதை நீ நினைத்து பார்த்தாயா

 
வீட்டில் முட்டை இட்ட கோழியை கூட நீ
விடை பெற்ற நாளினிலே சட்டியிலே கறியாக்கி
தட்டினிலே பரிமாறிய தாய் தந்தையர் இன்று
இக்கட்டினிலே கடன் தொல்லையில் இருப்பதை
இக்கணமாவது நீ நினைத்து பார்த்தாயா ,,,,,

கூடப் பிறந்து உன்னோடு குழந்தை பருவத்தில்
ஓடித்திரிந்து விளையாடி ஒன்றாக உறங்கிய
உன் சகோதரங்கள் அண்ணா என்று ஆசையுடன்
உன் கையை எதிர் பார்த்து வாடி இருக்கும் உன்
உண்மை உறவுகளை நீ நினைத்து பார்த்தாயா ,,,

சிங்களமோ திட்டங்களை தீட்டி ஏமாற்றினார்கள்
சட்டங்களை தங்கள் வசமாக்கினார்கள் அந்த
வட்டத்தில் வாழமுடியாத கட்டத்தில் நாடுகளில்
அலைந்து அகதி ஆனோம் இன்னும் நாம் இக்கட்டில்
இருக்கும் உறவுகளுக்கு உதவாமல் இருப்பதன் மாயம் என்ன ,,

பாரம் பரிய வட்டத்தில் வாழ்ந்த நாங்கள்
பாரீஸில் லண்டனில் சூரிச்சில் கனடாவில்
கட்டவிழ்ந்த காளைகளாய் கன்னியர்கள் பின்னாலே
காடையர்கள் உடன் சேர்ந்து சட்டங்களை கூட
மறந்து கடும் சேட்டை செய்வதன் மாயமென்ன ,,

கஸ்ரங்கள் பட்டது போதும் உன் உறவுகள்
காலத்தால் கேட்டது போதும் உன் வாழ்க்கை
காலங்கள் மாறட்டும் கஸ்ரங்கள் ஓடட்டும்
கண்ணீரில் வாழும் சொந்த உறவுகளை நீங்கள்
கருணை காட்டி காப்பாற்றுங்கள் நண்பர்களே ,,!!



This free script provided by
JavaScript Kit

Saturday, March 5, 2011

தமிழரோடு தமிழில் பேசுவோம்


உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து நாநூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. “பொதுவான தமிழ்” இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் “வட்டார மொழி இலக்கியங்கள்” என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் “அழிந்து போன மொழிகளின் பட்டியலில்” தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு “ஏயக்” மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்...
தலை நிமிர்ந்து நிற்போம்…


“தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை"






This free script provided by
JavaScript Kit